பெண் குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தை உயர்த்தி முதலீட்டாளர்களுக்கு அரசு பரிசு வழங்கியுள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனாவுக்கு, 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான வட்டி விகிதம் 8.2 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு 8 சதவீத வட்டி வழங்கப்பட்டது. ஆனால், மற்ற திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசு உயர்த்தவில்லை.
2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா தவிர, எந்த திட்டத்திற்கும் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படவில்லை. சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கான வட்டி விகிதம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 8.2 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக வட்டி விகிதம் அதிகரித்துள்ளது
இந்த நிதியாண்டில் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்துவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக முதல் காலாண்டில், சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் வட்டி விகிதத்தை 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக அரசாங்கம் உயர்த்தியது. இந்த வகையில் பார்த்தால், நடப்பு நிதியாண்டில், பெண் குழந்தைகளுக்கான இத்திட்டத்தின் வட்டியை, 0.6 சதவீதம் உயர்த்தியுள்ளது அரசு.
சுகன்யா சம்ரித்தி திட்டம்
சுகன்யா சம்ரித்தி திட்டம் என்பது பெண் குழந்தைகளுக்கான சிறிய சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டமானது 10 வயதுக்குள் இருக்கும் பெண்குழந்தைகளுக்கு மட்டும் பொருத்தமானது. ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலர் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கைத் திறக்க அனுமதிக்கப்படுவார், மேலும் ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கை மட்டுமே டெபாசிட் செய்பவரால் திறந்து இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டத்தின் நன்மைகள்
- வரிச் சலுகை: ஐடி சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை பலன் கிடைக்கும். கூடுதலாக, திரட்டப்பட்ட வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
- அதிக வட்டி விகிதம்: சுகன்யா சம்ரித்தி திட்டம் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. சிறு சேமிப்பு திட்டங்களில் இதுவே மிக உயர்ந்ததாகும். வட்டியானது வருடாந்தர அடிப்படையில் கூட்டப்பட்டு மாதந்தோறும் பெறப்படுகிறது.
- லாக்-இன் காலம்: கணக்கு திறக்கப்பட்ட தேதி முதல் அடுத்த 21 ஆண்டுகள் அல்லது குழந்தையின் திருமணம் வரை சேமிக்கலாம். குழந்தையின் திருமணத்திற்குப் பிறகு கணக்கு நிறுத்தப்படும். இதற்கிடையில், குழந்தையின் உயர் கல்விக்கு 18 வயதை எட்டியவுடன் ஒரே முறை மட்டுமே பணத்தை வித்ட்ராவ் செய்யமுடியும். கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து 14 ஆண்டுகள் வரை கணக்கில் டெபாசிட் செய்யலாம்.
- முதிர்வுக்குப் பின் வட்டி செலுத்தப்படும்: சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் இந்த பலனைப் பற்றி பலருக்குத் தெரியாது. திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகும், கணக்கு வைத்திருப்பவர் கணக்கை மூடவில்லை என்றால் வட்டி வழங்கப்படும். கணக்கு முடிவடையும் வரை முதிர்வுக்குப் பிறகு வட்டி செலுத்தப்படும்.
- நெகிழ்வுத்தன்மை: கணக்கின் செயல்பாட்டில் நெகிழ்வுத்தன்மை உள்ளது. ஆரம்ப வைப்புத்தொகையான ரூ.250 (முன்பு ரூ.1000) ஒருவர் கணக்கை இயக்கலாம் மற்றும் ரூ.100 இன் மடங்குகளில் எந்தத் தொகையையும் டெபாசிட் செய்யலாம். பெண் குழந்தை 10 வயதை அடைந்தவுடன், அவள் தனது கணக்கை இயக்கலாம்.
- முதிர்வுத் தொகை: பெற்றோர்கள் பணத்தை எடுக்க முடியாது மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது. கணக்கு இருப்பு மற்றும் திரட்டப்பட்ட வட்டி முதிர்வு நேரத்தில் கணக்கு வைத்திருப்பவருக்கு வழங்கப்படும். இது குழந்தைக்கு நிதி பாதுகாப்பை வழங்கும்.